புதன், 30 மே, 2012


என்றும் பிள்ளையாக....?


பால்ய வயதில்
பால் மாவினைத் -
திருடித் தின்றேன்;

இன்று....
மனையாளின்
மனையிலும்....
அதே கதைதான்!

           *
அன்னை - அன்று
என்னை ஆண்டாள்;
என்னை இன்று....
இல்லத்தரசி ஆள்கிறாள்!

          *
அவதரித்த இல்லத்திலே
அன்று நான்....
அடிமட்ட உறுப்பினன்;

இல்லாளின் ஆட்சியிலே
இன்றும் நான்....
மாணவன்!


       














இலவசச் சீருடை
இல்லாக் காலத்தே.... என்
வெள்ளாடை விருப்பத்தை
வென்றேன் - அன்று....
கண்ணீர் யுத்தத்திலே!

வந்து சேர்ந்த
வாழ்க்கையின்
வறுமைப் பாதையிலே....
'பசுமைப் புரட்சி'
செய்கிறேன் - இன்று....
பருத்தியாடை கட்ட!

       *
பள்ளிப் பருவத்திலே
துள்ளித் திரிந்த - என்
துடுக்கடக்க.... அன்று
பள்ளியாசானின்
பிரம்பு வந்தது!

இன்று....
துள்ளியெழும்
என் ஆசைகளுக்கு
கொள்ளி வைக்க
பள்ளியறைப் பங்காளியின்
பகிடிவதை வந்தது!

         ***




ஞாயிறு, 27 மே, 2012


மலட்டு மலர்கள்!


இயற்கையின் சிரிப்பை;
மலர்களில் பார்த்தோம்!


மண்ணின் மதிப்பை
ஏன் மறந்தோம்?


சிந்தனையை
அடகு வைத்து
சிறு சாடிகளில்
போலிப் பூக்களின்
செயற்கைச் சிரிப்பை
ரசித்தோம்!


செயற்கையோ
இயற்கையோ....
தடவிப் பார்த்தால்
பேதம் புரியவில்லை!


மேனியோ மென்மை
வாடாத தன்மை
வடிவும் உண்மை
வர்ணமும் பன்மை!


முத்த மிட்டால்....
வாச மில்லை;
மகரந்தப் பொடியும்
பூச வில்லை;


ஆலயம் செல்லும்
அந்தஸ்தும் - அந்தப்
பூவைக்கு இல்லை!


இல்ல மெல்லாம்
இடம் பிடித்தாலும்....
மானிட மனத்தை -
மயக்கி யாண்டாலும்....
மங்கையர் கூந்தலில்
தவ மிருந்தாலும்....


எப்போதுமே
சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பூமகளை....
எந்தத் தேனீக்களும்
தேடி வருவதில்லையே!


        ****
       

செவ்வாய், 8 மே, 2012


விலை போகுமோ வாலிபம்?


கோழை யென்றாய்
கொள்கை யற்ற -
ஆண்மை யென்றாய்!

கல்யாணச் சந்தையிலே
விலை போகும் - நவயுக
காளை யென்றாய்;

ஏழை நான்....
என் செய்வேன்!

பெட்டியிலே.... பணம்
இருந்தால்தானே....

அட்டியலாய் - உன்
சங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!

பத்துப் பவுணில்
பத்தரை மாற்றுத் தங்கத்தில்
பாவையுன் - காறை
எலும்பு மறைந்திடவே

போடவில்லை....
நகை யென்றால்....
பொறுத்திடுவாயோ - இந்த
பொல்லாத உலகத்திலே!

அடங்காத - உன்
ஆசைத் தீக்கு -
பல மடங்காய்
தீனி போடத்தானே....
கேட்கிறோம் - சீதனமே!

ஞாயிறு, 6 மே, 2012


கற்பிழந்த கவிதை மகள்!

உன் தனிமையை
இனிமையாக்க
கனிமொழியாய்
காதலியாய் - உன்
காலடி தேடிவந்தேன்!

எழுதுகோ லெனும்
தூரிகையால்....
காரிகை - என்
மேனியெங்கும்
சில்மிஷங்கள் செய்தாய்!

உன் கவித்துவம்
ஊரெல்லாம் மணக்க
தெருவெல்லாம் என்னைஇ
தேரேற்றி விட்டாயே!

வீரமே யில்லா
உன் நெஞ்சிலே - அது
உள்ளதாகவே சொல்ல
என் சொற்களுக்கு
தைரியம் பூசினாய்!

தகுதியே இல்லா
அரசியல் தலைவர்க்கு
போலிப் புகழ் பாடி....
வால்பிடிக்க வசதியாய்
பொய்மைகளால் எனை
புனைந்தாயே!

உன் கருத்தை
நீயே கற்பழித்து விட்டாய்;

காலமெல்லாம்
கற்புடனே வாழ்ந்த
என் வாழ்வினிலே....
களங்கத்தை கற்பித்தாயே!

கண்கெட்ட சமூதாயத்தின்
கருத்தினைத் திருத்திட - நீ
திடங்கொண்ட தெல்லாம்
தடம்புரண்டு போனதே!
 
உன் கருவையெல்லாம்
என்னுள்ளே....
புதைத்து வைத்தது....
உண்மையில்லையா....
வெறுங் கற்பனைதானா?

நேசத்தைப் பொழிந்த
உன் எண்ணங்களுக்கு
என் பாசத்தின் பரிணாமம்
புரிய வில்லையே!

பணத்திற்கு ஆசைப்பட்டு -
கவிமகள் எனை....
சினிமாப் பாட்டாய்
சிங்காரம் செய்து
ஆடவிட்டாயே -
துகில் உரித்து!

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011


மாறாத உண்மைகள்!

கடலும் - கண்மூடித்
தூங்கு வதில்லை;
காற்றும் - மௌனித்து
நிற்பதில்லை!

போற்றும் உடலும்
இறக்காமல் இருப்பதில்லை;
காக்கும் உயிரும்
பறக்காமல் வாழ்வதில்லை!


தேனும் மலரில்
நிலைப்பதில்லை;
தேடிய செல்வமும்
நிரந்தர மில்லை!

தேக சுகமும்
தொடர்ந்து வருவதில்லை;
தேவைகள் ஒரு போதும்
குறைந்து போவதுமில்லை!

நன்றி கொன்ற நாயை
கண்டதில்லை;
நன்றியுள்ளவரைக் -
காண்பதின்று சுலபமில்லை!

அகிம்சை வாழ - இங்கு
காந்தி மனமில்லை;
சனங்களின் மனங்களில்
சாந்தியைக் காணவில்லை!

உண்மையை உணர்ந்தவன் -
உலக - மாயையை நம்புவதில்லை;
தன்னையே உணராது
வாழ்பவர் மனிதரில்லை!














ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

எங்களைத் தெரியுமா?


பண்டைக் கால
பாரம்பரியங்கள்
இன்றுவரை....
இறந்து போகாமல்
காத்து வருகிறோம்;


நீதி வழுவா மன்னவர்,
நிழலும் புகழும்
செங்கோல் அறவும்
செழித்தே விளங்க
எங்கள் குலமும்
உழைத்தே வந்தது!


அரியணை மேலே,
அருகே...
அழகாய் நின்று
அரச பரம்பரையின்
அந்தஸ்தினையும்
உயர்த்தி நிறுத்தியவர்
எங்கள் இனத்தவரே!


வெண்மையாய் மட்டும்
வீற்றிருந்தோம் அன்று!
இன்றோ....


நிற வேறுபாடுகளும்
இனப்பாகு பாடுகளும்
எங்களிலும்
நிறையவே உண்டு!





ஆண் - பெண்
பால் வேறுபாடுகளும் - எங்களை
பல கூறுகள் போடுவதுண்டு!


பலரும்
பல் விழுந்தோரும் - எங்களை
இனங்கண்டு
பாதுகாப்பதுமுண்டு!


அரச குலம் -
மறைந்து போனதால்...
இறந்து போனது;
எங்கள் குலப் பெருமைகள்!


அதனால்....
நாய் பேய்களுக் கெல்லாம்
நாங்களின்று -
நல்ல - அடிமைகளானோம்!


நகரும் போது....
மண் பார்த்து நடந்தாலும்
தூங்கும் போது,
தலைகீழாய்
தொங்கியே ஆகுவோம்!


பொழியும் மழையும்
எங்கள் முதுகில்தான்;
சுட்டெரிக்கும்
சூரியனும்
பட்டுத் தெறிப்பது
எங்கள் மேனியல்தான்!


மரம் ஒன்றே யொன்று;
இலையும் ஒன்றேதான்;
என்றாலும்....
கிளைகளோ 
எட்டுத் திக்கும்
எட்டி நிற்கும்!'


விடுகதை யிது;
விடுவித்தால்....
விடை....
குடையென விரியும்!


                  














செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மேடு பள்ளம்!


அழுக்கேறிய -
கந்தலுடையில்...
கண்பார்வை குறைந்த
மந்த கதியில்
தட்டுத் தடுமாறும் உருவம்!


கையிலே....
ஊன்றுகோல்!
பையிலே....
பழைய பேப்பர்!
தொய்விலே....
தொடரும் துயரங்கள்!


உயர்சாதி வீட்டில்
ஒருகாலம் வாழ்ந்தவர்தான்!

நீந்தி விளையாட -
வீட்டுக் குள்ளேயே
வரவழைத்தவர்தான்!


நீடூழி வாழ -
சத்துணவுண்டு....
நோய்த் - தடுப்பூசிகளும்
போட்டதுண்டு!


நினைத்தபடி யெல்லாம்
வாழ்க்கைப் பாதையிலே
நடக்கப் பழகி....
விதிக்கு எதிராய்
விளையாடியதால்....
வழுக்கி விழுந்தவர்தான்!
வந்து கிடக்கிறார்;
வீதியோரம்!


வாங்கி வந்த இளமை;
வந்து சேர்ந்த பணம்;
வழியிலே....   
வடிந்து செல்ல......
உறவுகளும் -
உதிர்ந்து போக....


மனம் கசந்த -
மனித உருவத்துள்ளே
முதுமை முகாமிட்டு
நோய் நொடிகளை
குடியிருத்தியது!


கடைசியில்....
சாலையோரம் -
சவத்தைக் கிடத்திவிட்டு
எஞ்சியிருந்த உயிரும்
ஏமாற்றி விட்டது!


முகவரி கண்டு -
வாரிசுகள் ஓடோடி வந்து...
சங்கையாய்
அழைத்துச் சென்றார்;
சடலத்தை!


          ***