கல்விப் பாதையில்;
கனதூரம் நடந்து வந்த -
என் கால்கள் களைத்து
பாதையின் ஓரமாய் நின்று -
ஓய்வு பெறும் வேளையிலே....
ஒருதரம் திரும்பிப் பார்க்கிறேன்!
தொலைவி லொரு புள்ளி
தெளிவாய்த் தெரிகிறது!
எங்கள் கிராமத்துப் பள்ளி
கல்விப் பாதையில் கண்ட
முதற்புள்ளி அது!
ஆயிரத்துத் தொளாயிரத்து
நாற்பத் தாறிலே....
பொத்துவிலின் சொத்தாக -
பிறந்து வந்த....
ஆணிமுத்து அது!
'காட்டூர்' என்றவரின் -
கர்வ வாயடைக்க....
கைகண்ட மருந்தாய்
முளைத்து வந்த
முதல் வித்து அது!
நாங்க ளெல்லாம் -
கல்வி பயிலும் காலத்தே
நல்லுதாரணமாய்
போதிக்கப்பட்ட தெல்லாம்
அந்தத் திருவுருவத்தின்
திருநாமந்தானே!
இலங்கை யிலிருந்து....
இங்கிலாந்து வரை
கல்விப் பாதையின் நீளத்தை
கச்சிதமாய் அளந்த -
சாதனையாளனின்
சாந்த உருவமது!
1967 இலே....
மருத்துவத்துறை மாணவனாக
கொழும்புப் பல்கலைக் கழகத்துள்
நுழைந்து....
1972 இலே....
டொக்டராகப் பதவியேற்று;
பல வருடங்கள் பணியாற்றி
மருத்துவ உலகின்
பரந்த வான் வெளியில்
பறந்து திரிந்து
பட்டங்கள் வென்று....
இலங்கை
முஸ்லிம்கள் வரலாற்றில்
முதலாவது
'சிறு பிள்ளை மருத்துவராக'
சிறந்து விளங்கிய
மாமனிதனின் - சிறுபிள்ளைப் பருவந்தான்
ஒரு புள்ளியாய் எனக்கு தெரிகிறது!
பிணியாளர் மனங் குளிர
மருத்துவப் பணிகள் புரிந்து
பிறந்த பயனை அடைந்த
பெரு மகனின் திருவுருவமது
ஒரு புள்ளியாய் தெரிகிறது!
இலவச வைத்திய சேவையிலே
இறைபணி கண்டு -
தருமத்தின் வழியில் நடந்து வந்த
திருவுருவம் தெரிகிறது!
சாந்த குணம் சுமந்து
சந்தனமாய் மணந் தந்து
சரித்திரமாய் உயர்ந்து நிற்கும்
மா மனிதனின் புதுமாதிரியது!
சவூதி அரேபியாவின்
றியாத் நகரில்
பதினைந்தாண்டுகள்
இலவச வைத்திய சேவை செய்து
அரபு நாட்டு - அரச குடும்பத்தின்
அரண்மனை வைத்தியனாக வுமிருந்து
அரச வாரிசுகளுக்கு
ஆரோக்கியப் பணி புரிந்து -
மனங் கவர்ந்த சேவையாளனின்
பால பருவந்தான் - அங்கே
ஒரு புள்ளியாய்த் தோன்றியது!
ஆங்கிலேயர் ஆட்சியின்
அந்திம காலத்திலே.... எங்களூரின்
விதானையாராய் வீற்றிருந்த
மீராலெவ்வை மரைக்காரின்
தவப் புதல்வனாம்....
'முகம்மது சஹீத்' அவர்களின்
நிழற் படந்தான் அது!
1973 இலே....
நிந்தவூரின் மணமகனாக.... முன்னாள்
நிதியமைச்சர் முஸ்தபாவின் மருமகனாக....
அவரது மகள் நஸீராவை
வாழ்க்கைத் துணைவியாய் ஏற்ற
திருமகனின் திருவுருவமது!
பள்ளி வாயல்களுக்கும்;
கல்வி பயிலும் -
வறிய மாணவர்க்கும்;
வாழ்விழந்த விதவைத் -
தாய்மாருக்கும்....
மேலும் ஏழை எளியவர்க்கும்
நலவை நல்கிடும் -
நன்கொடைக் கரமுடைய
நல்ல மனித உருவமது!
'பிறர் நலம் பேணும் பணி;
இறையருள் பெறும்வழி' யென
இரகசியக் கொடையாளியாய் வாழும்
டொக்டர் சஹீத்
என்றும் எங்கள் 'இதயக்கனி'
இன்றும் இலண்டன் -
மாநகரில் வைத்திய சேவையில்
நன்றே வாழும்
இவர் இயல்பே
என்றும் தனி!
இறையருள் இவர்பெற
இறைஞ்சுகிறது; எனது மனம்!
* * *