பல முகங்கள்!
மனிதன்
மரண தண்டனை
விதிக்கப்பட்ட
ஆயுள்கால கைதி!
காலம்
மானிடரால்
மாசுபடுத்தப்பட்டு,
மறைமுகமாய்
நின்றழுது.....
கரைந்துருகும்
மெழுகுதிரி!
மனிதம்
மனித மனதி லிருந்து
இடம்பெயர்ந்த
அகதி!
கணவன்
குடும்பக் கோட்டையுள்ளே
தலைமைப் பதவியை
தக்கவைத்துக் கொள்ள
நித்தமும் போராடும்
தியாகி!
மனைவி
ஆளும் வர்க்கமாம்
ஆணினத்தின் பலமான
எதிர்கட்சித் தலைவி!
மாணவர்
பாடம் புரிகிறதோ....
இல்லையோ.....?
பள்ளிக்கு...
வருகை தரும்
வெள்ளை -
வண்ணத்துப் பூச்சிகள்!
ஆசிரியன்
வெள்ள நிவாரணம்
வேண்டாம்;
வறட்சி நிவாரண மாவது
வந்து சேராதோ.....?
என்றே... வாடி நிற்கும் -
அரச அநாதை!
பெற்றவர்
பெற்ற கடனுக்கு -
பிள்ளை....
கல்வி கற்றிட
பள்ளி எனும்
சிறையிலே...
தள்ளி விடும் -
ஜெயிலர்கள்!
கற்றவர்
சமூகத்தில் -
நடப்பது நடக்கட்டும்
'நமக்கேன் வீண் வம்பு'
என்று....
விலகி நின்று -
வேடிக்கை பார்க்கும்
நவயுக சுயநல வாதிகள்!
தனவந்தர்
'எல்லாம் எனக்குத்தான்
இறைவன் கொடுத்தான்!'
என்ற - வாதத்தால்...
இதயம்...
முடமாகிப் போன
தன - வேந்தர்கள்!
பொது மக்கள்
இவர்கள் -
எதற்குப் பொதுவானவர்கள்?
எனக்கப் புரியவில்லை!
சமூதாய வில்லர்களுக்கு
சரியான மதிப்பளிக்கும்
சன - நாயக மன்னர்கள்!
****
வாழ்க்கை புதிர்!
வாழ்க்கை ஒரு
சவாலானால்....
சாதிக்கலாம்!
போராட்டமானால்
வென்று காட்டலாம்!
விளையாட்டானால்
களமிறங்கலாம்;
விடுகதையானால்....
விடுவிக்கலாம்!
வெகுமதியானால்....
வரவேற்கலாம்;
சுமையானால்....
தாங்கிக் கொள்ளலாம்!
சந்தர்ப்பமானால்....
பற்றிப் பிடிக்கலாம்;
சாக்கடையானால்.....
பூக்கடையாக்கலாம்!
வினாக் குறியானால்
விடை காணலாம்;
வியப்புக் குறியானால்......?
சிறைக் கூடமானால்
அடங்கிக் கிடக்கலாம்;
மரண வேதனையானால்......?
தென்றலானால்....
சுகங் காணலாம்;
சூறாவளியானால்......?
****
அந்நியன்!
ஊழல் அதிகாரிகளின்
உத்தரவுகளுக்கு
தாளம் போடத் தெரியா
தன்னலமற்ற ஊழியன் -
வாழத் தெரியா அந்நியன்!
சுரண்டி உயர்ந்தவன்
கண்களிலே....
உண்மையாய் உழைத்து
உண்பவன் அந்நியன்!
பொய் வாக்குறுதிகளால்
தேர்தல் வலை விரித்து;
தெருவெல்லாம் சோடித்து
இனத்துவேச உணர்வினை,
இதயமெல்லாம் விதைத்து
மக்களை வசீயமாக்கும்
அரசியல்வாதிகளின்
அகப் பார்வையிலே....
புள்ளடி போடும்
பொது மகன் அந்நியனே!
நாடாளும் கதிரைகளிலே
கும்மாளம் போடும்
கூட்டத்தாருக்கு....
எதிரணிக்காரன்
எந்நாளும் அந்நியனே!
ஆளும் வர்க்கமாம்
பெரும்பான்மைக் காரரிடம்
வாழும் காலமெல்லாம்
சுய உரிமைப் -
பிச்சை கோரும்
சிறுபான்மைக்காரரும்....
அந்நியனே!
கடைசியில்.....
சுனாமி
நிவாணங்களால்
கருணைக் கரம் நீட்டி
கவனித்துக் கொண்டவனும்
அந்நியனே!
***
நெருப்புக்குள்ளே....
'பகைகளில் பெரியது
புகை' என்றாரே!
புகையை உள்ளிழுத்து
உயிரை வெளியே
ஊதித் தள்ளுகிறாயே!
உடல் உருப்படவா
உன் பணத்தை எரிக்கிறாய்;
உன் ஊனத்தை யல்லவா
தீக்கிரை யாக்கிறாய்!
புகைப்பதால்
சுகிப்பது இன்ப மன்று;
சௌக்கியம் சொன்னது
பெரும் துன்ப மென்று !
விருப்போடு
பிடிப்பவரின் கையிலே
பிற்காலப் பிழைப்புக்காய்
சிரட்டைதனை
பரிசளிக்கும் 'சிகரெட்'டே!
உயிரணுக்களிலே
ஊடுருவியே
உயிரை மெல்ல மெல்ல
உறிஞ்சுகிறாயே!
இள வயதிலேயே
எமலோகம்
அழைத்துச் செல்ல வந்த
வெள்ளைக்கார தூதுவனோ நீ!
செவ்விதழ் செல்விகளை
தேடும் வாலிபரே,
உங்கள்
'தார் ரோடு' உதடுகளை -
ஒரு தரம்,
கண்ணாடி முன் நின்று
பாருங்களேன்!
****
மனிதனின் மறுபக்கம்!
கடலென்றேன் உன்னை;
ஆழமறிய முடியாமல்!
காற்றென்றேன் உன்னை;
கடும் போக்கு உணராமல்!
வானென்றேன் உன்னை;
எண்ணம் போல்
வண்ணம் மாறும்
திரையென்று தெரியாமல்!
மானென்றேன் உன்னை;
மயக்கும் விழியை
மறக்க இயலாமல்!
நிலமகளென்றேன் உன்னை;
நிலைகொண்டுள்ள
பூகம்பம் உணராமல்!
மழையென்றேன் உன்னை;
விளையும் அனர்த்தம்
நினையாமல்!
தேனென்றேன் உன்னை;
எட்டாத தூரத்தை எண்ணாமல்!
மலரென்றேன் உன்னை;
மணம் தருவாயென்று!
மயிலென்றேன் உன்னை;
மனத்தோகை விரிப்பாயென்று!
நிலவென்றேன் உன்னை;
'நீல் ஆம்ஸ்ரோங்
நீயில்லை' என்றாயே!
காதலுக்கும் தினமுண்டு
கலந்து கொள்ளும்
மனமுண்டா என்றேன்;
மணம் கொள்ள
பணம் கேட்கும்
இதயமில்லா காதலுக்கு
எதற்கு நினைவுதினம் என்றாயே!
***
சம உரிமை!
அன்புத் தாயென்றும்
அவளே -
முன்னறி தெய்வமென்றும்
பின் - தாரமென்றும்
பெண் குலத்தை,
அகிலமே
போற்றும் போது.....
தாய்க் குலமின்று
தாழ்வு மனம் கொண்டு
'அடிமைகள்' என்று
தம்மைத் தாமே
தாழ்த்திக் கொள்ளல்
தரணியில் முறையாமோ?
வீட்டுக்கு மட்டுமே
தலைவியாய்
வீற்றிருந்த பெண்ணெ - இன்று
நாட்டுக்கும் தலைவியாய் -
ஆன பின்னே
சமவுரிமை
கேட்பதென்ன பெண்ணே!
ஆணுக்குப் பெண் -
அடிமை யென்று -
யார் மொழிந்தார்,
கணவனின்
அன்புக்கும் ஆசைக்கும்
அடிமையாவதே
பெண்ணுக்கு
பெருமை தருமே!
பெண்ணுக்கு உரிமை
மறுத்தவர் யார்....?
ஆணுக்கு உரிமை
கொடுத்தவர் யார்....?
பெண்ணுக்கு ஆண் -
பொன்னால் தாலி கட்டுகிறான்
அவளுக்கு,
அவனே வேலியு மாகிறான்
ஆணுக்குப் பெண்
தாலி கட்டலாமா...?
அவன்தான்
கழுத்தை நீட்டுவானா......?
சமரசம் இருந்தால்.....
சமவுரிமை -
தானே தோன்றுமே!
****
கற்பிழந்த கவிதை மகள்!
உன் தனிமையை
இனிமையாக்க
கனிமொழியாய்;
காதலியாய் - உன்
காலடி தேடிவந்தேன்!
எழுதுகோ லெனும்
தூரிகையால்....
காரிகை - என்
மேனியெங்கும்
சில்மிஷங்கள் செய்தாய்!
உன் கவித்துவம்
ஊரெல்லாம் மணக்க
தெருவெல்லாம் என்னை,
தேரேற்றி விட்டாயே!
வீரமேயில்லா
உன் நெஞ்சிலே - அது
உள்ளதாகவே சொல்ல
என் சொற்களுக்கு
தைரியம் பூசினாய்!
தகுதியே இல்லா
அரசியல் தலைவர்க்கு
போலிப் புகழ் பாடி....
வால்பிடிக்க வசதியாய்
பொய்மைகளால் எனை
புனைந்தாயே!
உன் கருத்தை
நீயே கற்பழித்து விட்டாய்;
காலமெல்லாம்
கற்புடனே வாழ்ந்த
என் வாழ்வினிலே....
களங்கத்தை கற்பித்தாயே!
கண்கெட்ட சமூதாயத்தின்
கருத்தினைத் திருத்திட - நீ
திடங்கொண்ட தெல்லாம்
தடம்புரண்டு போனதே!
உன் கருவையெல்லாம்
என்னுள்ளே....
புதைத்து வைத்தது....
உண்மையில்லையா...
வெறும் கற்பனைதானா?
நேசத்தைப் பொழிந்த
உன் எண்ணங்களுக்கு
என் பாசத்தின் பரிணாமம்
புரிய வில்லையே!
பணத்திற்கு ஆசைப்பட்டு -
கவிமகள் எனை...
சினிமாப் பாட்டாய்
சிங்காரம் செய்து
ஆடவிட்டாயே; அவனியில்
துகில் உரித்து!
****