மனமே, மயக்கமென்ன?
கருவறையில்
இருள் மயக்கம்;
கனிந்து விழுந்ததால்
மண்ணில் -
மதி மயக்கம்!
உருவாகும் வயதில்
வருவ தெல்லாம் மயக்கம்
பருவங்கள் மாறி மாறி
தருவ தெல்லாம்
வித விதமான மயக்கம்!
கல்விப் பாதையில் -
கலையிலொரு மயக்கம்;
கற்றபின் கணக்கும் -
தலையிலொரு மயக்கம்!
வேலைதேடி அலைவதில்
விளைவ தொரு மயக்கம்;
மாலைசூடும் - மண நாளில்
மனதிலெழும்..... காம மயக்கம்!
வெற்றிகள் வந்து குவிகையில்
புத்தியிலொரு மயக்கம்;
வீழ்ச்சிகள் வந்து சேர்கையில்
மனச் சோர்வினில் ஒரு மயக்கம்!
கோழையாய் குனிந்தால் -
கொள்கை மயக்கம்;
ஏழையாய்ப் பிறந்தால்
எல்லாமே துன்ப மயக்கம்!
குற்ற உணர்வுகள் -
கொண்டுவருவது ஒரு மயக்கம்;
மற்றவரில் குற்றம் காண்பவர் -
மனதிலொரு மயக்கம்!
பொறாமைத் தீ எரிகையில்
நெஞ்சிலொரு மயக்கம்;
பொல்லாதார் அறிவினிலே
பொங்கிவரும் ஒரு மயக்கம்!
புன்னெறிகள் பூஜிக்கப் பட்டால்
நன்னெறிகளில் மயக்கம்;
வன்முறைகள் வரவேற்கப்பட்டால்
நன்மறை வழிகளில் மயக்கம்!
இறுமாப்பில் விளைவது
இணையிலா தொரு மயக்கம்;
இறப்பை மறந்த இதயத்தில்
என்றுமெ மயக்கம்!
***
பள்ளம் பாயாத வெள்ளம்!
இரவு பகலாய் -
இரண்டு மூன்று நாளாய்
அடை மழை!
மடை உடைத்து
மதகு மேவி
பெருகியது;
பெரு வெள்ளம்!
வயல் வெளியும்
பச்சையாடை யைப் -
பறிகொடுத்து,
வெள்ளாடை உடுத்து
விதவையானது!
வீடு வளவு
வீதி - ஒழுங்கை
வெள்ளக் காடானது!
மடுமட்டை
குளம் குட்டை
பெருநீர்ப் பரப்பின் -
தனிக் கட்டுப் பாட்டில்!
பாடசாலைகள்
பள்ளிவாயல்கள்
தேவாலயம் - கோயில்கள்
இனவகுப் பெடுத்து
இடம் பெயர்ந்தோரின்
பூரண கட்டுப் பாட்டில்!
வந்த வெள்ளம்,
மந்த கதியில்
தந்த நிவாரணம்,
வெந்த உள்ளங்களின்
வேதனையைக் கூட்டியது!
சொட்டு அரிசியும்
தொட்டுக் குடிக்க
சீனி தேயிலையும் - பருப்போடு
கோதுமை மாவும்
மட்டுப் படுத்திய பங்கீடாய்
வந்து சேர்ந்தது;
கிராம் கணக்கில்!
வருகை தந்த
'டின் மீன்கள்'
வெள்ளத்தில் -
துள்ளிக் குதித்து
கள்ளப் பாழிகளில்
கவனமாய்
பதுங்கிக் கொண்டன!
பாதிக்கப் பட்டோரை
பாதிக் கண்ணாலும்
எட்டிப் பார்க்க -
மறுத்து விட்டன!
நிவாரணப் பட்டியலின்
நீளம் குறுகியதால்...
தட்டுப் பட்டுப் போனோரின்
தவிப்பிலே...
மன வேக்காட்டிலே...
வந்த வெள்ளம்!
வறண்டு பிளந்தது;
அந்த நிலம்!
***
இனியும் வேண்டாம்
இந்தக் கொடுமை!
உலைப் பானையும்
ஊன்றி யிருக்கும்
மூன்று கற்களும்
செய்து கொண்ட ஒப்பந்தம்,
செயலிழந்து போய்....
மூன்று நாளாயிற்று!
அலைந்து திரிந்த -
கிழப்பூனை யொன்று
அடுப்படி முகாமிலே
முடங்கிக் கிடக்கிறது!
நாட்டின் -
வன்முறைக் கலாசாரத்தில்
தன் தாலியை -
பலிகொடுத்த
தாய்மை யின்று....
கூட்டுக் குள்ளே
குறுகிப் போய்
வீட்டுக் குள்ளே -
குந்தியழுகிறது!
வற்றிய வயிற்றின்
சுரப்பிகளின் -
கிளர்ச்சியினால்
பற்றியெரியும் பசிக்கு....
பாலாபிஷேகம் கோரி
பச்சிளம் மனசு,
குச்சிக் குடிசையுள்ளே
அழுகைப் புரட்சி செய்கிறது!
மச்சு வீட்டில்
பிறக்காதது,
மழலை செய்த குற்றமோ?
வந்தவர்க் கெல்லாம்
முந்தானை விரிக்க -
நினைக்காமல்....
ஒழுக்க வேலிக் குள்ளே
ஒடுங்கிக் கொண்டது
விதவை செய்த குற்றமா.......?
***