பள்ளம் பாயாத வெள்ளம்!
இரண்டு மூன்று நாளாய்
அடை மழை!
மடை உடைத்து
மதகு மேவி
பெருகியது;
பெரு வெள்ளம்!
வயல் வெளியும்
பச்சையாடை யைப் -
பறிகொடுத்து,
வெள்ளாடை உடுத்து
விதவையானது!
வீடு வளவு
வீதி - ஒழுங்கை
வெள்ளக் காடானது!
மடுமட்டை
குளம் குட்டை
பெருநீர்ப் பரப்பின் -
தனிக் கட்டுப் பாட்டில்!
பாடசாலைகள்
பள்ளிவாயல்கள்
தேவாலயம் - கோயில்கள்
இனவகுப் பெடுத்து
இடம் பெயர்ந்தோரின்
பூரண கட்டுப் பாட்டில்!
வந்த வெள்ளம்,
மந்த கதியில்
தந்த நிவாரணம்,
வெந்த உள்ளங்களின்
வேதனையைக் கூட்டியது!
சொட்டு அரிசியும்
தொட்டுக் குடிக்க
சீனி தேயிலையும் - பருப்போடு
கோதுமை மாவும்
மட்டுப் படுத்திய பங்கீடாய்
வந்து சேர்ந்தது;
கிராம் கணக்கில்!
வருகை தந்த
'டின் மீன்கள்'
வெள்ளத்தில் -
துள்ளிக் குதித்து
கள்ளப் பாழிகளில்
கவனமாய்
பதுங்கிக் கொண்டன!
பாதிக்கப் பட்டோரை
பாதிக் கண்ணாலும்
எட்டிப் பார்க்க -
மறுத்து விட்டன!
நிவாரணப் பட்டியலின்
நீளம் குறுகியதால்...
தட்டுப் பட்டுப் போனோரின்
தவிப்பிலே...
மன வேக்காட்டிலே...
வந்த வெள்ளம்!
வறண்டு பிளந்தது;
அந்த நிலம்!
***
No comments:
Post a Comment