Sunday, July 22, 2012

நிறைவாழ்வு தரும் புனித ரமழானே!


நன்மையே நல்கிடும் சுரங்கமாக
நரகினையே மூடிடும் பெருங்கதவாக;
உண்மையே உணர்த்திடும் நன்மதியாக
உலகில் உதித்திடுவாயே புனித ரமழானே!

குறையேயிலா மறைதந்த மாதமாக - மன
கறை நீக்கியே இறையருள் துலக்கவே
நிறைவாழ்வு தந்து நிம்மதி நிலை கொள்ளவே
நிலவுலகிலே நீ வருவாய் எமது மனம் மகிழவே!

நமையாண்ட புலன்களைளெல்லாம் - நன்றே
நாமாள நோன்பினை நன்கொடையாய் தந்தே
தீமைகள் எரித்து மேலும் நன்மைகள் பெருகவே
தீஞ்சுவை யமுதாய் தோன்றிடுவாயே ரமழானே!

இச்சைகளுக்கு இறுக்கமாக - இரும்பு விலங்கிட்டே
இருகண்ணும் காதும் கரங்களும் - நமது நாவுமே
நிச்சயமாகவே இறையாணை என்றும் பேணவே
நற்செய்திகள் கூறியே ஆண்டுதோறும் வருவாயே!

இரக்க மற்ற அரக்க மனம் கொண்டு வாழ்வோருக்கும்
ஈகையின் மேன்மையினை எடுத்தியம்பியே - நாளும்
கரைந்திடும் காலத்தின் நிலையாமை - அவர் அறிந்திடவே
கரையிலா நெடுவானில் சென்றே மறைந்திடுவாயே!

                               * * *

No comments:

Post a Comment