வாயில்லா வார்த்தைகள்!
காகம்:
ஒற்றுமையின் சின்னமாய்;
உலக சமாதானத்திற்கு -
வழிகாட்டும் கருப்புப் புறாக்கள்!
கொக்கு:
வெள்ளாடை தரித்து -
நதிக்கரையில்....
தவமிருக்கும் அசைவ முனிவன்!
மயில்:
தன் எழிலை - பிறர் ரசிக்க....
தன் கால்களின் -
அவலட்சணத்தையே.....
எண்ணி ஏங்கும் எழிலரசன்!
குயில்:
வீடுகட்டி....
குடியிருக்கத் தெரியாத -
தெருப் பாடகன்!
புறா:
சமாதானம் தேடி
பறந்து..... பறந்து.....
இளைத்துப் போன
வெள்ளைத் தூதுவன்!
கோழி:
தன் மாமிசத்தை -
புசிக்கத்தான்.....
தீனி போடுகிறான்;
என்ற உண்மையை
உணராத மக்கு!
வெளவால்:
பறப்பதனால்....
பறவை யென்றும் -
பாலூட்டுவதால்....
விலங் கென்றும் -
பல பெயர் கொண்ட
மர்ம வீரன்!
யானை:
தன் பலம்
தனக்கே தெரியாத
கருமலை!
மான்:
தன் மேனி யெல்லாம்
புள்ளிகளை.....
அள்ளி ஒட்டிக் கொண்ட
கவர்ச்சிக் கன்னி!
கரடி:
உதவி செய்வதாய்
எண்ணியே....
உபத்திரவம் செய்யும்
உதவாக் கரை நண்பன்!
முதலை:
நாக்கு இல்லா விட்டாலும்
நர மாமிசத்தை
நாடி யோடும் - பயங்கர
வீரன்!
சிறுத்தை:
புள்ளி மானை -
பிடித்துண்ண.....
பதுங்கும் பலவான்!
சிங்கம்:
சிறுத்தைகளை -
சிறு பான்மையாய்....
எண்ணியே....
வாளேந்தி வந்து -
ஆள நினைக்கும்
பெரும்பான்மை இனத்தின்
அசைக்க முடியாத அரசன்!
முயல்:
ஆமையோடு போட்டி யிட்டு
தோற்றுப்போன...
உள் நாட்டு ஓட்ட வீரன்!
ஆமை:
எமது தாய் நாட்டுக்கே
பெருமை தேடித் தந்த -
சர்வதேச ஓட்ட வீரன்!
******
No comments:
Post a Comment